அவர்களும் அப்படித்தான்

    நீங்கள் மதுரையில் இருந்து தூத்துகுடிக்குத் தரைவழியாகச் செல்லும்போது எப்படியும் கண்டிப்பாக அந்த ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும். சொல்லவேண்டும் என்றால் இந்த இரண்டு ஊருக்குச் சரியாக நடுவில்தான் அந்தக் காட்டாறு இருக்கிறது.  முன்பெல்லாம் வருடம் ஒருமுறையாவது மழை பெய்யும் காலங்களில் தண்ணி பெருக்கெடுத்து ஓடும்.இப்போது அவ்வளவு மழையும் இல்லை அந்த ஆற்றில் சரியாக நீரும் வருவது இல்லை. மணல் திருட்டைத்  தவிர வேறொன்றும் அந்த ஆற்றில் இப்போது இல்லை.

     உங்களுக்குக் கொஞ்சம் வரலாறு தெரிந்து இருந்தாலே, உலகில் எல்லா வளர்ந்த நாகரிகமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் இந்த மாதிரியான சில முக்கியமான ஆற்றுபடுக்கைகைளில் இருந்துதான் வந்து இருக்கின்றன என்று தெரிந்து இருப்பீர்கள்.

     அந்த ஆறு சுற்றி ஓட அமைந்திருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவன்தான் நானும்.வீட்டில் இருந்து இரண்டு நிமிடத்தில் நடந்தால் ஆற்றில் இறங்கலாம்.சில விசயங்களை எவ்வளவுதான் திறமையாக வார்த்தைகளில்,எழுத்துகளில் கொண்டுவர முடிந்தாலும் அது நிறைவாக அமைந்துவிடுவது இல்லை.அதில் ஒன்றுதான் இந்த ஆற்றோடு நான் பகிர்ந்து கொண்ட சந்தோஷமான தருணங்களும்.

      சிறுவயதில் விளையாடி,குளித்து,தனிமையில் உடகார்ந்து அதோடு என் உறவை வளர்த்திருந்தேன்.இப்போதும் அருமையான ஒரு விசயத்துக்கு அதை உறவு கொண்டாடுகிறேன்.காதலிக்க. ஆம் என் காதல் தொடங்கியும், நடந்து கொண்டிருப்பதும் அதில்தான்.

     அவள் பக்கத்து தெருதான் தூரத்துச் சொந்தம். சிறுவயதில் நான் தோமே என்று உட்கார்ந்து இருந்தாலும் அவளின் சேட்டைகளை ரசித்தவன். அப்போது அதைவிட வேறென்றும் இருந்ததில்லை. கல்லூரியில் படிக்கும்போதுதான் மாறியிருக்கிறோம். அவள் வேறு கல்லூரி. வாரம் ஒருமுறை வீட்டுக்கு வருவோம். சந்தித்துக்கொள்ள இருந்த தயக்கம்,வெக்கம் எல்லாமே இருவருக்கும் புதியதாக இருந்தது. அவள் சொந்தமாக இருந்தும்.

     ஒரு கட்டத்தில் இருவரும் காதலை உறுதிபடித்தியபிறகு மீண்டும் நாங்கள் சிறுவயதில் இருந்து வாழ ஆரம்பித்தோம் என்றே சொல்லவேண்டும். அவள் ரசித்தவை,நான் ரசித்தவற்றில்  அந்த ஆறு பொதுவாக இருந்தது. இப்போதும் நண்பர்களோடு போவதுபோல ஆற்றில் சென்று தனிமையில் அமர்வது ஏதோவொரு தனிச்சுகம் இருவருக்கும். காதலின் கொஞ்சல்கள்,கெஞ்சல்கள்,சண்டைகள் என எல்லாவற்றையும் அந்த ஆறு கேட்டு இருக்கும்.

      இந்த விடுமுறைக்கும் வந்து இருந்தாள். சாயங்காலம் போகவேண்டும் என பேசியிருந்தோம். நாங்கள் மட்டும் போகமுடியாது என்பதால் அதுக்கு இரண்டு நண்பர்களை சேர்த்துக் கொள்வது வழக்கம்.அன்றும் அப்படியே போனோம்.
பார்த்த பத்துநிமிடத்துக்கு முகம் முழுதும் வெட்கத்தை வைத்து இருந்தாலும் எப்போதுமே அவளின் கண்களில் வெட்கம் இருக்கவே செய்யும். ஏனென்று கேட்டால் இதுவரை சிரிப்பை தவிர எனக்கு ஏதும் பதில் கிடைத்ததாக நினைவில்லை.

“அம்மா விடவே இல்ல தெரியுமா?” என்றாள்

“ஏன்?”

“தெர்ல எப்படியோ சொல்லிட்டு வந்துட்டேன் உனக்கென்ன யாரு கேட்கறாங்க?”

“எனக்கென்னமோ எங்க வீட்டுக்குத் தெரிஞ்சிருச்சி போல ஆனா ஒன்னும் கேட்கல”

“அடப்பாவி என்னடா சொல்றே?”

“இதுல என்ன இருக்கு என்னைக்காச்சும் தெரிஞ்சுதானே ஆகனும் அது இப்பயே தெரிஞ்சிட்டு போகுது”என்றேன்
.
“நீ சொல்றே ஆனா எனக்குப் பயமா இருக்கு”

      கொஞ்ச தூரத்துக்கு எதுவும் பேசவில்லை.காற்று மெதுவாக வீச நடந்து கொண்டு இருந்தோம்.கொஞ்சம் இருட்ட தொடங்கியிருந்தது.மணல் திருட்டால் ஆற்றை காயபப்டுத்தி இருந்தார்கள். அங்கிருந்த ஒரு பெரிய பள்ளத்தின் விளிம்பில் உட்கார்ந்தோம்.

     அப்போது எங்கள் கண்ணில் பட்டது எதிர்த்திசையில் கொஞ்ச தூரத்தில் ஒளியில் மிளிர்ந்த ஒரு கூடாரம். இங்கு இருந்து பாக்க அப்படித்தான் தெரிந்தது.எங்கள் இருவருக்குமே தெரியும் யாரும் அங்கு வந்து தங்கியிருக்க மாட்டார்கள் என்று. அதற்கு அவசியம் இல்லை. அப்படியென்றால் அந்த கூடாரம் போன்ற இடம்???

“என்னது அது புதுசா?”

“கூடாரம் மாதிரி இருக்குல?” என்றேன்

“ஆமாம் இங்கு வந்து யாரு இருக்கப் போறா?”

“ஒருவேளை ஆடு மேய்க்கிரவங்க கெடை போட்டு இருப்பங்களோ?” கேட்டாள்

“அப்படியே இருந்தாலும் இந்த நடு ஆத்தில் மின்சாரம் எப்படி இருக்கும்?”

   இருவரும் அங்குபோய்ப் பார்க்க முடிவெடுத்து நடந்தோம். அது எங்கள் சொந்த கிராமம் அதோடு அருகில் இருக்கிற கிராமத்து மக்கள் கொஞ்சம் பரிச்சியமானவர்களே அதனால் பயமோ,தயக்கமோ இல்லை.

    அருகில் சென்ற போதுதான் தெரிந்தது அதன் முழு உருவமும். ஏற்கனவே அது ஒரு மண் அள்ளப்பட்ட குழியில் இருந்தது. அண்டார்டிக்காவில் குளிருக்குத் தற்காலிகமாகப் போடப்படும் கூடாரம் போல இருந்தது.ஆனால் அளவில் பெரியது. ஆள் நடமாட்டம் இல்லாமல் விளக்கு மட்டும் சுற்றி எரிந்து கொண்டு இருந்தது. நாங்கள்தான் முதலில் பார்க்கிறோமோ அல்லது இதுக்குமுன் யாராச்சும் பார்த்து இருப்பார்களோ தெரியவில்லை.

     இன்னும் அருகில் சென்றவுடன் அந்தச் சத்தம் கேட்டது. அது ஒரு இயந்திரம் அமைதியாகத் தூரத்தில் ஓடுவதுபோல ம்ம்ம்ம் என்ற அழுத்தமான சத்தம்.ஆள் நடமாட்டம் தெரியவில்லை.கொஞ்சம் இருட்டியிருந்தது.அவள் என் கையை பிடித்தாள். ஆச்சர்யம், சந்தோசம் பிடிக்கச் சொன்னால்கூட வேறெங்கோ பார்வையைப் பார்த்துவிட்டு ஏதும் கேட்க்காதது போல இருப்பவள் இப்போது பிடித்து இருந்தாள் காரணம் பயம்.

  எனக்கும் பயம் இருந்தது. அவளின் பரிசத்தில் கொஞ்சம் சந்தோசமாக மாறியதில் அது தெரியவில்லை.

“வா போய்டலாம், நேரம் அதிகமாயிடுச்சு” என்றாள் உள்ளே போகவேண்டாம் என்ற எண்ணத்தில்.

“இரு என்ன இருக்குனு பார்த்துட்டுப் போய்டலாம் நம்ம ஊருல இப்படி என்ன இருக்கு?”

“வேண்டாம் எனக்குப் பயமாக இருக்கு ஏதாவது நடந்துரப் போகுது” இன்னும் அழுத்தமாக கையை பற்றி இழுப்பதுபோல.

     உள்ளே எட்டிப்பார்த்தேன் அந்தக் கூடாரம் முழுதும் ஒரே அறையாக இருந்தது. தனியறை என்று எதுவும் இல்லை. அது நான்கு அடி உயரமுள்ள ஒரு இயந்திரம் போன்ற பகுதியின் மீது இருந்தது.அதில் இருந்துதான் சத்தம் வந்து கொண்டு இருந்தது. உள்ளே இன்னும் வெளிச்சமாக இருந்தது. ஆட்கள் யாரும் இல்லை

       கதவிடுக்கில் உள்ளே எட்டிப்பார்த்தபடியே திறந்து உள்ளே போனோம்.அவளும் உள்ளே வந்தாள் பயந்தபடியே.
முதலில் தென்பட்டது ஒரு சிறிய சுவர் போன்ற பகுதியில் வயர்கள் விரவிகிடந்த சில கணினிகள் உள்ள இடம்.அதில் யாரோ உட்கார்ந்து இருப்பதுபோல இருக்கவே இன்னும் எங்களுக்குப் பயம் அதிகமானது. காரணம் அதன் உருவமும் அது உட்கர்ந்து இருந்த விதமும்தான். எல்லாக்  கணினி திரையிலும் சொல்லி வைத்தாற்போல ஒரே வரைபடமாக இருந்தது. கூடாரத்தின் மற்றப் பகுதியில் சிறு செவ்வக வடிவ பெட்டிகளாக இடத்தை அடைத்து இருந்தன. அங்கு அந்த உருவத்தைத் தவிர வேறு ஏதும் இல்லை மனிதர்களாகச் சொல்லும்படி.

        அது நாங்கள் வந்ததை உணர்ந்து இருக்கவேண்டும். எந்தவித சலனமும் இல்லாமல் சாதாரணமாகவே அது திரும்பியது. அப்போது அதன் முகத்தை எங்களால் பார்க்க முடிந்தது. அது மனித இனம் இல்லை எங்களைப் பார்த்ததில் எந்தவித உணர்ச்சியையும் அதன் முகத்தில் பார்க்க முடியவில்லை அல்லது அது காட்டவில்லை.

      முகம் என்று சொன்னால் நம்மைப் போன்று அமைப்பு இருந்தாலும் அளவு,உறுப்புகளின் வடிவம் அனைத்தும் வேறு. மூக்கு வெளியில் இல்லாமல் வெறுமனே துளை மட்டுமே இருந்தது. சப்பையாக இருந்தும் வாய் இருக்கும் இடத்தில் கொஞ்சம் தடிமனான உதடு இருப்பது தெரிந்தது.
அவள் என்கையை இழுத்துகொண்டு ஓட முயற்சிக்கும்போது கதவு மூடியது. திரும்பும் நேரத்தில் அது எங்களின் அருகில் வந்திருந்தது. இறுக்கமான நீச்சல் உடைபோல ஏதோ ஒன்று அதன் உடம்பில் தெரிந்தது. உண்மையான தோல் நிறத்தை பார்க்கமுடியவில்லை. கண்களில் இமை இல்லை கருவிழி எது என்று பிரித்து அறிய முடியாத எதோ ஒரு நிறத்தில் இருந்தது. அது முகத்தை எங்களின் பக்கம் திருப்பி வைத்ததில் இருந்து அது எங்களைத்தான் பாக்கிறது என்பதை உணர்ந்து அசையாமல் நின்றோம். இதுவரை அவளின்  முகத்தில் வெட்கத்தைப் பார்த்தவன் முதன்முறை கலவரத்தைப் பார்க்கமுடிந்தது.

“யார் நீங்க ஏன் இந்த வேஷம் போட்டு இருக்கீங்க? என்ன செய்றிங்க இங்க?” என்று கொஞ்சம் பயம் கலந்த குரலில் கேட்டேன்.

     கொஞ்சம் அமைதி அதன் உடம்பில் எந்த அசைவும் இல்லை. எதோ பயத்தில் பேசிவைத்தேன் அதுக்கு என்பாசை புரியுமா? அல்லது அதால் பேசமுயடியுமா? என்பது கூடத் தெரியாமல்.

“அது உனக்குத் தேவை இல்லாதது” அது சொன்னது. குரல் மெல்லியதாக ஒரு மனிதன் குரல் போல இல்லாமல் செயற்கையாக இருந்தாலும் அதுக்கு எப்படித் தமிழ் தெரிந்தது என்ற ஆச்சர்யத்தில் இருக்கும்போது...

“எனக்கு நீங்கள் பேசும் மொழி ஒரு பிரச்சினை இல்லை” என்றது.

“மனிதனா?” கேட்டேன்

“இல்லை”

“அப்போ?’

“அதான் சொன்னேனே தேவை இல்லை என்று”

“சரி கதவத்  திறங்க நாங்கள் போகிறோம்” என்றேன்

“நீங்கள் போக முடியாது போகவேண்டிய இடம் வேறு”

“புரியல எங்க போனும் நாங்க?”

“போகவேண்டிய இடத்துக்கு நான் அனுப்பி வைக்கிறேன் அதுக்குத்தான் நான் இங்க வந்து இறங்கி இருக்கேன்”

“இறங்கியா? அப்படினா புரியல?”

“உனக்கு எதையும் புரியவைக்க எனக்கு அவசியம் இல்லை.”

“என்ன பண்ணனும் நாங்க?’

“நான் சொல்வதைக் கேட்டால் உயிரோடு பத்திரமாக இருக்கலாம் வேறொன்றும் செய்யப் போவதில்லை.”

“விட்டுவிடுங்கள் நாங்கள் போகவேண்டும்”

       அதனிடம் இருந்து பதில் இல்லை.திரும்பி சென்று அந்தக் கணினி போன்ற இயந்திரத்தின் முன் அமர்ந்து ஒரு ஐந்து நிமிடம் எதோ செய்தது.பின் எங்களிடம் திரும்பி வந்தது.

“இன்றிலிருந்து நீங்கள் இருவரும் ஊரில் இருந்து காணமல் போனவர்கள்.”

“ஏன்?”

“கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சொன்ன அது அங்கும் இங்கும் நடந்தபடி வேலைகளைச் செய்ய ஆரம்பித்தது. இவள் அழுதே விட்டாள் சத்தமில்லாமல். எனக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. அது தனது வேலையில் மும்முரமாக இருந்தது.

“எங்களை விடு போகவேண்டும்” என்று கொஞ்சம் கத்தினேன். ஆனால் அதுக்குக் கேட்காதது போல அது தனது வேலையைச் செய்துகொண்டு இருந்தது. அரைமணிநேரம் கழிந்தபிறகு எங்களின்பக்கம் வந்தது.

‘இப்போது பூமியில் இருந்து கிளம்பிப்  போகபோகிறோம்”

“என்னது பூமியை விட்டா” என்ற எனக்கு மயக்கமே வந்தது.

“கிளம்பும்போது கிழே விழுந்து உருளாமல் இருக்க வேண்டுமானால் வந்து அமர்ந்து பாதுகாப்புக் கவசத்தை அணியுங்கள்” என்று சொன்னபடி அது அமர்ந்தது.

தயங்கி நின்றவர்கள் கொஞ்சம் அந்தக் கூடாரம் ஆட ஆரம்பித்தவுடன் வேகமாகச் சென்று அதன் அருகில் இருந்த இடத்தில் அமர்ந்தோம்.அது எங்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசத்தை அணிவித்தது.

“இது உன் மனைவியா?”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டோம் ஏதும் சொல்லவில்லை.

“அப்படி இருந்தால் உங்களுக்கு ஒரு புதியனுபவம் காத்து இருக்கிறது பயம் வேண்டாம்” என்றது

“என்ன அனுபவம்?எங்கே?”

“எங்கள் சோதனைக்  கிரகத்தில்”

“சோதனைக்  கிரகமா?”

“ஆமாம் இப்பொது நான் உன்னிடத்தில் விளக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. உங்களை அழைத்துச் செல்வது ஒரு சோதனைக்கு. நீங்கள் மட்டும் இல்லை பூமியில் பல்வேறு இடத்தில் இருந்து எங்கள் விண்கலம் நிறையா மனிதர்களை சந்தர்ப்பத்தில் பிடித்துக்  கொண்டு வருவார்கள். எனக்குக்  கொஞ்சம் அதிர்ஷ்டம் போல நீங்களாகவே வந்து விட்டீர்கள்”

“அப்போ நாங்கள் இனி பூமிக்கு திரும்பவே முடியாதா?”

“முடியாது கவலை வேண்டாம் அதுவும் பூமி போல ஒரு கிரகம்தான் எதுவும் உங்களுக்கு ஆகாமல் கவனித்துக் கொள்வது என் கடமை.”

“என்ன கிரகம்? எங்கு இருக்கிறது? எதுக்கு மனிதர்கள் அங்கு வேண்டும்?”

“எங்கள் சொந்த கிரகம் நீங்கள் கணக்கிட முடியாத தொலைவில் இருக்கிறது, ஆனால் நாங்கள் இப்போது கண்டு பிடித்திருக்கும் புதிய ஒன்று இங்கு அருகில் இருக்கிறது. அங்கு எங்களுக்குத்  தேவையான வசதிகளை ஏற்படுத்தவேண்டும் அதுக்குத்தான் இந்த முயற்சி.”

“அப்படினா நாங்கள் உங்களுக்கு அடிமையாக வாழ வேண்டுமா? அல்லது வேலை செய்ய வேண்டுமா?”

“ஏதும் செய்ய வேண்டாம் வந்து அங்கு இருந்து வாழ்ந்தாலே போதும் அந்தக்  கிரகத்தைப்  பற்றியும் எங்களுக்குத்  தெரிந்துவிடும் அதே நேரத்தில் கொஞ்ச காலத்தில் உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை வைத்து எங்களுக்கு இந்தக்  கிரகம் வாழ உகந்ததா இல்லியா என்பதைக்  கண்டுபிடித்து எங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்” என்றது.

“அப்படின்னா நீங்களும் எங்களைப்  போன்ற மனிதர்களா என்ன?”

“அதிக ஒற்றுமை இல்லாவிட்டாலும் அடிப்படையில் உயிர்வாழ தேவையான காரணிகள் உங்களுக்கும் எங்களுக்கும் ஒன்றுதான். அதில் முக்கியமாகச்  சுவாசித்தல் மட்டும்.

“உங்கள் உடம்பும் கார்பன் அடிப்படை மூலக்கூறுகளால் ஆனதா?”

“நீ அதிகம் தொந்தரவு செய்கிறாய், உனக்குப்  பயம் இல்லையா? எப்படிக்  கேள்வி கேட்கிறாய் இந்த நிலைமையில்?” இதைக்  கேட்கும்போது எந்தக்  கோப உணர்ச்சியும் அதன் முகத்தில் இல்லை அல்லது எனக்குத்  தெரியவில்லை.

“பயம் இருக்கிறது ஒரு ஓரமாய், ஆனால் இந்தப்  புதிய கிரகம், விண்கலம், நம்மை விட வித்தியாசமான உயிர்கள் இவற்றில் எனக்கு ஆர்வம் அதிகம் அதான் கேட்டேன்” என்றேன்.

“ஆர்வம் வர கொஞ்சமாவது இதுபற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டுமே உனக்கு எந்த அளவில் இருக்கிறது? இதுபற்றி எந்த அளவுக்குத் தெரியும்?”

“எனக்கு ஒன்றும் தெரியாது எங்க ஊரில் சுஜாதா ன்னு ஒரு எழுத்தாளர் இருந்தார் அய்யோ இல்லை..இல்லை.... இருக்கிறார். அவருக்கு வேலையே இதான் எல்லாம் தெரிந்தும் முழுதும் சொல்லாமல் இப்படி அரைகுறையாக ஒரு விசயத்தைப்  போகிற போக்கில் சொல்லிவிட்டு போயிருவார். அவ்வளவுதான் அதைப்பற்றி முழுதும் தெரிந்துகொள்ள நாங்கள் படும்பாடு இருக்கே......!!!. அதுக்குத்  தேவையான புத்தகத்தின் பேரையும் சொல்லிடுவார் முடிஞ்சா படிச்சிட்டு புரிஞ்சிகோங்கனு அடுத்த வேலை அந்தப்  புத்தகத்தைத்  தேடிபிடித்துப்  படிப்பதுதான் என் வேலை. அப்படித்  தெரிந்து கொண்டதுதான் சில விசயங்கள்.”

      நாங்கள் இருவரும் பேசிகொள்வதை ஏதோ மூன்றாம் மனுஷியாகக்  கவனித்துகொண்டு இருந்தவளை பார்த்தேன், கண்களில் இன்னும் பயம் அப்படியே இருந்தது.இந்த நிலைமையிலும் உனக்கு இந்தப்  பேச்சு தேவையா என்பது போல இருந்தது அவளின் பார்வை.

“இந்த மாதிரி கேள்விகளைக்  கேட்குறதுக்குப்  பதிலா எவ்வளவு நேரம் இந்த விண்கல பயணம்? அங்கு இருந்து எப்படித்  திரும்புவது இதைப்பற்றிக்  கேட்டுதொலையேன்?” என்றாள் கோபமாக.

அவள் சொன்னது  எனக்கும் சரியென்று பட்டது.

“எவ்வளவு நேரம் இந்தப்  பயணம் தொடரும்? கொஞ்ச காலம் கழித்து எங்களைத்  திரும்பி வந்து விட்டுவிடுவிங்க தானே?”

“திரும்பியா?? அதான் சொன்னேன்ல இனிமேல் நீங்க அங்கேதான் இருக்கணும் அதுதான் உங்கள் கிரகம்”

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்துகொண்டோம்.அவளின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.

“சரி இந்தப்  பயணம் எப்போது முடியும்?”

“இன்னும் கொஞ்ச நேரத்தில், நாம் இப்போது ஒளியின் வேகத்தைவிடப்  பலமடங்கு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம். அதனால் இன்னும் கொஞ்சம் நீ தொந்தரவு செய்துகொண்டு இருந்தால் கிரகம் வந்துவிடும்”

“என்னது ஒளியின் வேகத்தைவிட அதிக வேகமா?” என்று ஆர்வத்தில் கத்தியே விட்டேன். அவள் மீண்டும் அதே பார்வை.. இந்த நேரத்தில் இது ரெம்ப முக்கியமா என்பதுபோலப்  பார்த்தாள்.

“ஆமாம் ஒளியின் வேகத்தில் சென்றால் பலவருடம் பிடிக்கும் இந்தத்  தூரத்தை சில மணிநேரத்தில் கடக்கும் வேகத்தில்தான் நாம் இப்போது சென்று கொண்டிருக்கிறோம்” என்றது.

“அதான் ஒளியின் வேகத்தை மிஞ்சி எதுமே பயணிக்க முடியாதே?”

“யார் சொன்னது? உங்கள் சுஜாதாவா?”

“இல்லை ஐன்ஸ்டீன்”

“சரிதான் ஆனால் கொஞ்சம் சுலபமாக யோசித்தால் ஒளியின் முன்னால் செல்ல முடியுமே?”

“எப்படி அதான் கேட்கிறேன்?’

“இப்போது ஒளியின் வேகத்தில் செல்ல முடியாது சரி ஆனால் அந்த ஒளியே உன்னை உந்தித்  தள்ளிக்கொண்டு போகிறது அதுவும் அது பயணிக்கும் வேகத்தில் என்றால் சாத்தியம்தானே”

“ஆம்” என்று எங்கோ பார்த்தேன் யோசித்துகொண்டே.

“அப்போ இந்த விண்கலமும் அந்த முறையில்தான் இயங்குகிறதா என்ன?”

“அதான் சொன்னேனே இது ஒளியின் வேகத்தை விடப்  பலமடங்கு வேகம் என்று இது வேற முறையில் இயங்குகிறது”

“அப்படின்னா அந்த ஒளியின் வேகத்தில் பயணிக்கும் முறை உங்களுக்கு எப்படித்  தெரியும்?”

“அது எங்கள் கிரகத்தில் உள்ள நெடுந்தூர பயணங்களுக்கு உபயோகிக்கின்றோம்”

“எப்படிச்  சாத்தியம்?”

“அதைச்  சொல்ல முடியாது மற்றொருமுறை சந்திக்கும்போது தெளிவாகச்  சொல்லுகிறேன்” என்றது.

“சரி இந்த விண்கலமாவது எப்படி இயங்குகிறது என்பதைச்  சொல்லுங்க?’

      ஒருமுறை திரும்பி என்னவோ மாதிரி பார்த்தது. அதன் முகபாவனையையோ உணர்ச்சியையோ கண்டு அர்த்தம் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்னால். இதே இடத்தில் என்னவளாக இருந்தால் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். ஒருவேளை என்னவளை போல அந்த வேற்றுகிரகவாசிக்கு முகத்தில் உணர்ச்சிகளைக்  காட்ட தெரியாதோ என்னமோ?

  “இது ஒருவித ஈர்ப்புவிசையில் இயங்குகிறது. ஈர்புவிசைக்குத்  தேவையான கிராவிடான் துகள்களை ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஒன்றுசேர்க்கும் போது அங்கு அதிக ஈர்ப்பு விசை ஏற்படும் அப்போது அது பக்கத்தில் இருக்கும் பொருளை தன்னோக்கி இழுக்கும், இதுதான் இந்த விண்கலம் பயணிக்கும் தத்துவம்.”

“ஈர்ப்பு விசைக்குத்  தேவையான துகளை நீங்கள் கண்டுபிடித்து அதை உபோயோக படுத்தியும் விட்டிங்கலா?”

“இந்த விண்கலத்தின் முன்பகுதியில் அந்த அமைப்பு இருக்கிறது. அந்தத்  துகள்களைச்  செயற்கையாக ஒரு மாற்றம் செய்து வெளியில் இருந்து பிரித்து எடுத்து ஒரு இடத்தில் குவியச்செய்யும் உடனே அங்கு அதிக ஈர்ப்பு உண்டாகும்போது இந்த விண்கலம் அதைநோக்கி பயணிக்கும். இது நடப்பது மிகக்குறைவான நேரத்தில் என்பதால் நம்மால் வேகமாகப்  பயணிக்க முடிகிறது.”

“ஒரு காந்தத்தைப்  பின்தொடரும் இரும்பு துண்டு போலவா?”

“அது எனக்குத்  தெரியாது” என்றது

      தனது இடத்தில் இருந்து எழுந்து பின்பக்கமாகச்  சென்று எதையோ சரிபார்த்துக்கொண்டு இருந்தது. ஒன்றுமட்டும் தெளிவாகப்  புரிந்தது இது போகும் வேகம், இடம் எல்லாவற்றையும் பாக்கும்போது கண்டிப்பாக நான் நினைத்தால்கூடக்  கண்டிப்பாகத்  திரும்பி பூமிக்கு வரமுடியாது என்று. அதை யோசித்துகொண்டே அவள் இருந்த பக்கம் திரும்பினேன். ஒருகையால் மற்றொரு கையின் விரலை பிடித்துகொண்டு எதையோ யோசித்துக்கொண்டு இருந்தாள்.

“என்னாச்சு என்ன யோசிக்கிறே?”

“இல்ல இந்நேரம் எங்கவீட்டுல தேடியிருப்பாங்க, நீயும் நானும் சேர்ந்து காணோம்னு தெரிஞ்சிருக்கும்ல?”

“அப்போ நம்மளை இவன் வேற்றுகிரகத்துக்குக்  கடத்திட்டுபோறது உனக்குப்  பிரச்சினை இல்லை என்னோடு காணமபோயிட்டேனு உங்க வீட்டுக்குத்  தெரியிரதுதான் கவலையா இப்போ?”

“அப்படி இல்லை”

“உணமைக்கே காதலிச்சியா என்னைய? ஒருகட்டத்தில் வீட்டில் சம்மதம் இல்லமா நாம தனியா போய்க்  கலியாணம் பண்ணிக்கிற சூழ்நிலை வந்திருந்தா நீ வந்து இருக்க மாட்டியா?”

“அதுவேற இதுவேற. இந்த நிலையில் நம்ம காதல் சண்டை தேவையா சொல்லு”என்றாள் கோபமாக

மீண்டும் வந்து அமர்ந்த அது, என்னாச்சு உங்களுக்குள் ஏதும் பிரச்சினையா?” என்றது

“இல்லையே” என்றேன்

“இல்லாமல் இருப்பது நல்லது ஏனென்றால் உங்களுக்குள் பிரச்சினை என்றால் அது எங்களுக்கு நஷ்ட்டம்”

“உங்களுக்கு ஏன் நஷ்ட்டம்?”

“ஆமாம் உங்களை இங்கு அழைத்துவருவது நீங்கள் இனப்பெருக்கம் செய்து இந்தக்  கிரகத்தில் இருக்க வேண்டும் என்றே. உங்களுக்குள் சண்டை பிரிவு என்றால் என்ன செய்ய?”

இப்போது அவள் இருக்கும் பக்கம் திரும்பினேன். நான் திரும்புகிறேன் என்று தெரிந்து வேறு எங்கோ பார்வையைப் பார்த்தாள்.

“சரி அவள் உன் மனைவிதானே?”

“இல்லை காதலி”

“காதலின்னா?”

“நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் அதனால் அவள் என் காதலி”

“இதுபற்றிய குறிப்பு எங்கள் கிரகத்தில் எனக்குக்  குறிப்பிடப்படவில்லையே? எங்களின் கணக்கு கணவன் மனைவிகளை அழைத்துவரவேண்டும். அப்போ நீங்கள் கணவன் மனைவி இல்லையா?”

“அப்போ கணவன் மனைவி இல்லேன்னா திரும்பி பூமிக்கு அனுப்பிருவிங்களா என்ன?”என்றேன் சந்தோசம் கலந்த குரலில்.


தொடரும்.....


4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

கிராமமும், விஞ்ஞானமும்...ம்ம்ம்ம் அருமை...!

கணேஷ் said...

ரெம்ப நன்றிங்க கருத்துக்கு..)

Unknown said...

Dear ganesh,

I read all your posts, very excellent, Learnt many new things. Thanks pl continue

கணேஷ் said...

நன்றி.. கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன் .:)